வெனிசுலா பிரச்சினை: சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துகிறது இந்திய கம்யூ.

 மு.வீரபாண்டியன்

மு.வீரபாண்டியன்

Updated on
1 min read

சென்னை: ‘வெனிசுலாவை விட்டு அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வலியுறுத்தி சென்னை அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாளை (ஜன.6) சென்னையில் நடத்தப்படும்’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சோசலிச கொள்கைகளை கடைபிடிக்கும், எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மீது அமெரிக்கா கொடூரமான ராணுவத் தாக்குதலை நடத்தியுள்ளது. அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் கைது செய்து, தனது நாட்டுக்கு, அமெரிக்கா நாடு கடத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

வெனிசுலாவின் சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும், இறையாண்மைக்கும், சுயநிர்ணய உரிமைக்கும் எதிரான அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கண்டித்தும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும், அமெரிக்கா நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலை செய்திடக் கோரியும், வெனிசுலாவை விட்டு அமெரிக்கப் படைகள் உடனடியாக வெளியேற வலியுறுத்தியும், ஒன்றிய மோடி அரசு அமெரிக்காவை கண்டிப்பதோடு ‘வெனிசுலாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பிட வேண்டும் என வலியுறுத்தியும் நாளை (ஜன.6) காலை 10.30 மணிக்கு, சென்னை அண்ணாசாலையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது.

இந்தப் போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தலைமை தாங்குகிறார். கட்சியின் மாநில துணைச் செயலாளர் எம்.ரவி, தேசியக் குழு உறுப்பினர்கள் வஹிதா நிஜாம், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சிவா, மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் மு.வரதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி, செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ஏ.ராஜ்குமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பி.வி.சீனிவாசன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் கே.கஜேந்திரன் ஆகியோர் இப்போராட்டத்திற்கு முன்னிலை வகிக்கின்றனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p> மு.வீரபாண்டியன்</p></div>
“ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதால் நான் மகிழ்ச்சியாக இல்லை; இது மோடிக்கும் தெரியும்” - ட்ரம்ப்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in