மதுரை: குறைபாட்டுடன் பிறந்த குழந்தையைக் கொன்ற வழக்கில் தம்பதிக்கு விதித்த ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்தது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ரேவதி. தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு மனநலப் பாதிப்புடன் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பராமரிப்பதற்காக ரேவதி பேராசிரியர் பணியிலிருந்து விலகினார்.
எனினும், குழந்தையை நினைத்து கணவன், மனைவி இருவரும் மன உளைச்சலுக்கு உள்ளானார்கள். 2018-ல் குழந்தை விஷமருந்தியதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தது. குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்ததாக கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் இருவருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து இருவரும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்து நீதிபதிகள் ஜி.கே.இளந்திரையன், ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் பல சாட்சிகள், பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளனர்.
இருப்பினும், பெற்றோரால் விஷம் கொடுக்கப்பட்டு குழந்தை இறந்தது என்பது மருத்துவ ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது. குழந்தையை வளர்ப்பதில் குற்றம் சாட்டப்பட்ட பெற்றோர் சந்தித்த சிரமங்களை இந்த நீதிமன்றம் அனுதாபத்துடன் கருத்தில் கொண்டாலும், அந்தக் குழந்தை தானாக இந்த உலகுக்கு வரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பெற்றோர் கொலை செய்வதற்கு சட்டம் அனுமதித்தால், அதுபோன்ற குழந்தைகள் யாரும் இந்த உலகில் உயிர்வாழ முடியாது. குழந்தை மனநலப் பாதிப்புடன் பிறந்தாலும், உடல் ஊனத்துடன் பிறந்தாலும் அல்லது எந்தக் குறைபாடும் இல்லாமல் பிறந்தாலும் அவர்களைப் பராமரிப்பது பெற்றோரின் கடமையாகும்.
சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொண்டு, மற்றொருவரின் உயிரைப் பறிக்க உரிமையில்லை. மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக பல பெற்றோர் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். இந்த வழக்கில், இருவருக்கும் விசாரணை நீதிமன்றம் தண்டனை வழங்கியது சரியே. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.