

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுப் பணிகளில் அடங்கிய வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக்காவலர், வனக்காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான காலிப்பணியிடங்களுக்கான முடிவுகள், தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் கடந்த ஜனவரி 7-ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தற்போது அப்பதவிகளுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகஸ்ட் 24-ம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். நாள், நேரம், இதர விவரங்கள் அடங்கிய இதற்கான அழைப்பாணையை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மட்டும் தகவல் தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே தபாலில் அனுப்பப்படாது.
சான்றிதழ் மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு பணிக்கு தேர்வுசெய்யப்படுவர் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. குறிப்பிட்ட நாள்-நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.