

புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரயில் நிலையம்.
குன்னூர்: ரூ.12.18 கோடியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட குன்னூர் ரயில் நிலையத்தை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 75 ரயில் நிலையங்கள் மேம்பட்ட வசதிகளுடன் புனரமைக்கப்பட்டுள்ளன. இதில், நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையமும் ஒன்று. குன்னூர் ரயில் நிலையம் ரூ.12.18 கோடி செலவில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட்டுள்ளது.
நவீன முன்பதிவு அலுவலகம், மேம்படுத்தப்பட்ட காத்திருப்போர் அறை மற்றும் ஓய்வு அறை, நீலகிரி மாவட்ட வனப் பகுதிகளில் வாழும் வன விலங்குகள் மற்றும் பறவைகளின் ஓவியங்கள், எல்இடி மின் ஒளி அலங்காரங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் இருந்து காணொலி வாயிலாக நேற்று மதியம் திறந்து வைத்தார்.
இதை முன்னிட்டு குன்னூர் ரயில் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.எம்.ராஜூ (குன்னூர்), மு.போஜராஜன் (ஊட்டி), குன்னூர் நகர் மன்ற தலைவர் சுசீலா, சேலம் கோட்ட ரயில்வே முதன்மை, தலைமை இயந்திர பொறுப்பு மேலாளர் முகுந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில், ‘விக்ஷித் பாரத், விக்ஷித் ரயில்வே’ என்ற தலைப்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் தோடர் பழங்குடியினரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.