

திருமாவளவன்
வேலூர்: மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்திஉள்ளார்.
வேலூரில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக அரசுக்கு விசிக ஆதரவு அளித்து அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் எதிர்கால அரசியல் குறித்து உயர்நிலை கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கவுள்ளோம். குறிப்பாக அண்ணாமலை பாஜகவிலிருந்து வெளியேறி அனுமதி பெற்று ஒரு இயக்கத்தைத் தொடங்குகிறார்.
அவர் பாஜகவிலிருந்து வெளியேறுவது என்றால் செய்தியாளர்களுக்கு அறிவிப்பு செய்தால் போதும். ஆனால் அரசு அதிகாரி போல் பாஜகவுக்கு விலகல் கடிதம் கொடுத்து அனுமதி பெற்று அதன் பின்னர் புதிய இயக்கம் தொடங்குகிறார். மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்தாலும் அதை தமிழக மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்.
மேகதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேலும், சட்டப்பேரவையில் முதல்வர் முன்மொழிந்த தீர்மானத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேகேதாட்டுவில் அணைக்கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என முதல்வர் விஜய் தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனை உறுதிப்படுத்தச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்துக் கட்சிகளும் எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் இதில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இதுதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும். தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி பாலியல் கொடுமைகள் பெண்கள் சிறுமிகள் தொடர்பான விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்ற பொறுப்புணர்வு முதல்வருக்கு இருக்கிறது. பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு இன்னும் அதிக அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.