

‘கூட்டணி ஆட்சி இல்லை’ என கூறிய அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரை முனிச்சாலையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், "தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை என முதல்வரே சொல்லிவிட்டார். 93 இடங்கள் வைத்திருந்தபோதே கலைஞர் யாருக்கும் பங்கு கொடுக்கவில்லை, பிறகு எப்படி இப்போது கொடுக்க முடியும்? வரும் தேர்தலில் 170 தொகுதிகளில் நாம் நிற்போம்; 150 முதல் 160 இடங்களில் உதயசூரியன் மட்டும் தனித்து ஜெயிக்கும்" எனப் பேசியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "2021-ல் நீங்கள் 173-ல் போட்டியிட்டு 133 இடங்களில்தான் வெற்றி. நாங்கள் கேட்பது நீங்கள் தோற்ற இடங்களைத்தான்.
அதிகாரப் பகிர்வு என்பது அவசியம்; ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை. அதை மக்கள் தீர்மானிப்பார்கள்" என பதிலடி கொடுத்தார். இதனால் திமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக தலைமை அவசர அழைப்பு: தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா? என்றும் சமீபத்தில் ராஜகண்ணப்பன் பேசியிருந்தார். அதற்கு, ராஜகண்ணப்பனைப் பற்றி மக்களுக்குத் தெரியும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பதிலடி கொடுத்தார்.தேமுதிக, காங்கிரஸ் என அடுத்தடுத்து ராஜகண்ணப்பன் உதிர்க்கும் சர்ச்சை கருத்துகளால் கூட்டணிக்குள் சலசலப்பு வெடித்திருக்கிறது.
இதையடுத்து, நெல்லை தச்சநல்லூரில் கட்சி நிகழ்ச்சியில் இருந்த ராஜகண்ணப்பனை, திமுக தலைமை அவசரமாக சென்னைக்கு அழைத்திருக்கிறது. தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை விரைந்த அவரிடம், இன்று தலைமை விளக்கம் கேட்கப்போவதாக சொல்கிறார்கள்.