

புதுச்சேரி: புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இண்டியா கூட்டணியை அமைத்துள்ளது.
ஆனால் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள், கூட்டணி ஒப்பந்தத்தை மீறி அவரவர் விரும்பிய தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கலுக்கு பிறகும் தொகுதி பங்கீட்டு குழப்பம் நீடிக்கிறது. காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 14 தொகுதிகள் திமுக வசம் அளிக்கப்பட்டது. அக்கட்சி, உள்ஒதுக்கீடாக விசிகவுக்கு உழவர்கரை தொகுதியை ஒதுக்குவதாக தெரிவித்தது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளிலும் மனு தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே, இண்டியா கூட்டணியில் சேராமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முத்தியால்பேட்டை, பாகூர், திருபுவனை, லாஸ்பேட்டை ஆகிய 4 தொகுதிகளிலும் மனு தாக்கல் செய்துள்ளது. இண்டியா கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தட்டாஞ்சாவடி, உழவர்கரை ஆகிய இரு தொகுதிகளில் மனு தாக்கல் செய்துள்ளது.
காங்கிரஸ் தொகுதிகளில் மனுதாக்கல் செய்த தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு கட்சியில் இருந்து வழங்க வேண்டிய ஏ, பி படிவங்களை திமுக தலைமை வழங்கவில்லை. இதனால் அவர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்த அனைவருக்கும் அக்கட்சி ஏ, பி படிவங்களை வழங்கியுள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதனால் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட காலாப்பட்டு, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மங்கலம், திருபுவனை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இவர்களை வாபஸ் பெறும்படி காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், கட்சியின் அறிவுறுத்தலை கருத்தில் கொள்ளாமல் காலாப்பட்டு தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஷாஜகான், ராஜ்பவன் தொகுதியில் வழக்கறிஞர் குமரன், மங்கலத்தில் ரகுபதி, திருபுவனையில் வேலு ஆகியோர் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கி விட்டனர். நெல்லித்தோப்பு தொகுதியில் மட்டும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு, “கட்சி தலைமை உத்தரவை ஏற்று மனுவை வாபஸ் பெறுவேன்” என்று அறிவித்துள்ளார்.
மற்ற 4 தொகுதிகளில் கூட்டணி ஒப்பந்தத்தை மீறி மனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர்கள் கடைசி நாளான இன்று மனுவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் இந்த 4 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் போட்டியிடும் நிலை ஏற்படும்.