

‘‘ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்லாது, தொண்டர்களின் விருப்பமும் அதுவாக உள்ளது. இதை கூட்டணி பேச்சு வார்த்தையில் கேட்டு பெற வேண்டும் என்று கட்சி தலைமைக்கு வலியுறுத்தி இருக்கிறேன்’’ என்று சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயற்குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் அணில் ஜெய்ஹிந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஓபிசி நலன் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னெடுப்புகள், தமிழக தேர்தல் வெற்றி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது. காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே, ராகுல் காந்தி,பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விரைவில் தமிழகம் வர உள்ளனர். இடம் தேர்வு செய்தபின்பு அதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்படும். இளம் தலைவர்கள் தொடர்பான கருத்து கணிப்பு வந்துள்ளது. எந்த கருத்துக்கணிப்பாக இருந்தாலும், அது எப்படி இருந்தாலும், இண்டியா கூட்டணி முன்னணியில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் பேசும்போது, "திமுக- காங்கிரஸ் கூட்டணி நீண்ட நாட்களாக வலுவாக நீடித்து வருகிறது. சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் பெற வேண்டும். ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்பது எனது விருப்பம் மட்டுமல்லாது, தொண்டர்களின் விருப்பமும் அதுவாக உள்ளது. இதை கூட்டணி பேச்சுவார்த்தையில் கேட்டுபெற வேண்டும் என்று கட்சி தலைமைக்கு வலியுறுத்தி இருக்கிறேன்’’ என்றார்.
இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ்சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, ஜிதேந்திர பகேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.