

மயிலாடுதுறை- அணைக்கரை நகர பேருந்தில் டிஜிட்டல் பெயர் பலகையில் ஓடிய வாசகம்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு ஆகிய 3 இடங்களில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், பேருந்துகளில் உள்ள டிஜிட்டல் பெயர் பலகைகளில் அடிக்கடி குளறுபடிகள் நடப்பதால், பயணிகள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை - அணைக்கரை நகர பேருந்தில் டிஜிட்டல் பெயர் பலகையில் ‘குத்தாலம் பயலுக கொடூரமா’ என்ற வாசகம் ஆங்கிலத்தில் ஓடிக்கொண்டிருந்ததை இளைஞர்கள் பலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ரவிக்குமார் கூறியது: கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் நகர பேருந்துகளில் ஊர் பெயர்களில் குளறுபடிகள் நடப்பதால், பாரம மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பெயர் பலகையில் பேருந்து சென்றுவரும் ஊர்களின் பெயர்கள் சரியாக இருக்கிறதா என்பதை நடத்துநர், ஓட்டுநர்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, “தொழில்நட்ப கோளாறு காரணமாக இதுபோன்று ஏதாவது பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். அதை அறிந்து உடனுக்குடன் சரிசெய்து வருகிறோம்” என தெரிவித்தனர்.