

சென்னை: காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து இ.கம்யூ சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னையில் தங்கசாலை மணிக்கூண்டு அருகே மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவி வந்தாலும் ஈரான் நமக்கு வழக்கம்போல் எரிவாயு, எண்ணெய்களை வழங்கி வருகிறது.
நட்பு நாடான ரஷ்யாவும் தங்கு தடையில்லாமல் எரிவாயு வழங்குகிறது. ஆனால் இந்தியாவில் காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் ஹோட்டல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. மத்திய அரசே விலையை தீர்மானிக்கிற பொறுப்பை ஏற்க வேண்டும். இல்லையென்றால் எரிவாயு, எண்ணெய் மீதான விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்காவது வழங்க வேண்டும்.
தவெக புதிய கட்சி, தற்போது தான் ஆட்சிக்கு வந்திருக்கிறது. இதன் கட்டமைப்பு புதிது. இதனால் தடுமாறுவது இயல்பு. அவர்களுக்கு கால அவகாசம் தேவை. பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுவது ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும்.
எனவே சட்டம் - ஒழுங்கில் தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.