மு. வீரபாண்டியன்
கோப்புப் படம்
‘‘போராடும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்’’ - மு.வீரபாண்டியன்
சென்னை: ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் கோரி போராடும் ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரே காலகட்டத்தில் பணியில் இணைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் கோரி போராடும் ஆசிரியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச வேண்டும்.
கடந்த 2009 ஜூன் 1-க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.8,370 வழங்கப்படுகிறது. அதே சமயம் அந்த தேதிக்குப் பிறகு 2009-ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,200 வழங்கப்படுகிறது. இந்த முரண்பாடுகளை களையக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் கடந்த மூன்று நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்த ஊதிய முரண்பட்டால் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தினர் கூறி வருகின்றனர். எனவே போராடுகின்ற ஆசிரியர் சங்கத்தின் தலைவர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், போராடும் 1,400 ஆசிரியர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அரசு திரும்பப்பெற வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.
