

ஹர்ஷவர்தன்
நாமக்கல்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின்போது தேர் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் வைகாசி தேர்த்திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, எதிர்பாராதவிதமாக தேர் நின்ற இடத்தில் உள்ள சுவர் மற்றும் தேர் சக்கரத்தின் இடையே இரு இளைஞர்கள் சிக்கி நசுங்கினர். அவர்களை பக்தர்கள் மீட்டு, திருச்செங்கோடு மருத்துவமனைக்கும் பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பினர்.
இதில் திருச்செங்கோடு கூட்டப்பள்ளியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஹர்ஷவர்தன் (20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது நண்பர் வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சஷ்டிகன் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக திருச்செங்கோடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இக்கோயிலில் 450 ஆண்டுகளாக பழமையான தேர் உலா வந்த நிலையில், ரூ.2.17 கோடியில் புதிய தேர் கட்டப்பட்டு 3 மாதங்களுக்கு முன்னர் வெள்ளோட்டம் நடைபெற்று முதல்முறையாக நேற்றுதான் தேரோட்டம் நடந்தது. இதனிடையே உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரைச் சந்தித்து அமைச்சர்கள் அருண்ராஜ், லோகேஷ் தமிழ்ச்செல்வன், தமிழன் பார்த்திபன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
முதல்வர் நிவாரணம்: இதனிடையே இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் விஜய் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்த சஷ்டிகனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.