

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற பகுதிகள், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும். தமிழகம், புதுச்சேரி,காரைக்காலில் அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.
டிச.15, 16-ம் தேதிகளில் கடலோர தமிழகத்திலும், 17-ம் தேதி தமிழகத்தில் பரவலாகவும், 18, 19-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் குறைவான வெப்பநிலை பதிவாகி வருகிறது.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மலைப்பகுதியை பொருத்தவரை ஊட்டியில் 7 டிகிரி, கொடைக்கானல், குன்னூரில் 9 டிகிரி, ஏற்காட்டில் 10 டிகிரி, சமவெளிப் பகுதியை பொருத்தவரை திருத்தணியில் 16 டிகிரி, வேலூர், தருமபுரியில் 17 டிகிரி, புதுச்சேரி, சேலத்தில் 19 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், மாமல்லபுரம், கோவையில் 20 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் (டிச.14, 15) குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும். இதனால், கடும் குளிர் நிலவும்.