

சென்னை: தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் குறைந்து குளிர் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (டிச.15) கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரியில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 16-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 17-ம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 18-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19, 20 தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
இன்று காலை 8.30 மணி வரை பதிவான குறைந்தபட்ட வெப்பநிலை அளவுகளின்படி, மலைப் பகுதிகளில் அதிகபட்சமாக ஊட்டியில் 5.6 டிகிரி, கொடைக்கானலில் 6.6 டிகிரி, குன்னூரில் 9 டிகிரி, ஏற்காடில் 10 டிகிரி செல்சியஸ், சமவெளிப் பகுதிகளான
தருமபுரியில் 16.5 டிகிரி, வேலூர், கோவையில் 17 டிகிரி, சேலத்தில் 17.5 டிகிரி, திருச்சி, மதுரை, நாகப்பட்டினத்தில் தலா 19 டிகிரி, புதுச்சேரி, சென்னை மீனம்பாக்கத்தில் 20 டிகிரி, நுங்கம்பாக்கத்தில் 21 டிகிரி குளிர் பதிவாகியுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.