

சென்னை: எஸ்சி, எஸ்டி மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், திட்டங்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று முதல் வர் விஜய் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையாக சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், ‘தமிழ்நாடு மேம்பாட்டு செயல்திட்ட சட்டம்’ கடந்த 2024 மே 29-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின்படி எஸ்சி, எஸ்டி துறைக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை கண்காணிக்க முதல்வர் தலைமையில் மாநில மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் 2026-27-ம் நிதியாண்டுக்கான முதல் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாவது: எஸ்சி, எஸ்டி மேம்பாட்டுச் செயல்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை எளிய மக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக உபயோகிக்க வேண்டும்.
இதன் செயல்பாடுகளை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக இத்திட்டங்களை செயல்படுத்தும் துறைகளின் மாதாந்திர செலவின விவரம், பணி முன்னேற்ற அறிக்கை மற்றும் பயனாளி களின் விவரத்தை www adtwdap.tn.gov.in என்ற வலைதளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்துக்கு இடையூறாக உள்ள தடைகளைக் கண்டறிந்து, அவற்றை களைவதற்கான பரிந்துரைகளை தெரிவிக்க வேண்டும். அதற்கான புதிய திட்டங்களை அனைத்து துறைச் செயலர்கள் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.