

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ம்கட்ட பணிகளை முதல்வர் விஜய் நேரில் ஆய்வு செய்ததுடன், பொதுமக்களுடன் சக பயணியாக ரயிலில் பயணம் செய்தார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு வார நாட்களில் தினமும் தலைமைச் செயலகம் வந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி பணிகளை முடித்துவிட்டு மாலை வீடு திரும்புகையில் அவ்வப்போது ஆய்வுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப் பணிகளை முதல்வர் விஜய் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதற்காக தலைமைச் செயலகத்தில் இருந்து தனது காரில் முதல்வர் விஜய் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் வந்தடைந்தார்.
அங்கிருந்து மெட்ரோ ரயிலில் பயணித்து நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்றார்.
மெட்ரோ ரயிலுக்கான டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, பொதுமக்களுடன் சக பயணியாக பயணம் செய்த அவர் பயணிகளுடன் கலந்துரையாடினார். அவருடன் பயணித்த பொதுமக்கள் முதல்வருடன் உற்சாகமாக செல்பி எடுத்தும், அவர் கைகளில் முத்தம் தந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்பின் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்துக்கு சென்ற முதல்வர் விஜய்யை, துறைசார்ந்த அதிகாரிகள் வரவேற்று நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் நடைபெற்று வரும் அடுத்தகட்ட கட்டுமானப் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
அப்போது மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஏற்பாடுகள், கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம், கண்காணிப்பு நடைமுறைகள், போக்குவரத்து வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் விரிவாக கேட்டறிந்தார். கட்டுப்பாட்டு மையத்திலும் ஆய்வு செய்த முதல்வர், மெட்ரோ ரயில் இயக்கம் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது, அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகள், பயணிகளுக்கான வசதிகள் மற்றும் சேவைகள் எவ்வாறு மேம்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் விளக்கம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் விரிவாக்கத் திட்டங்களின் நிலை, அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். ஆய்வை முடித்து வெளியே வந்த முதல்வர் விஜய்க்கு அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அவரை கண்டதும் கைகளை அசைத்தும், முழக்கமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து கிண்டி கத்திப்பாரா பகுதிக்குச் சென்ற முதல்வர் விஜய், அங்கு நடந்துவரும் மெட்ரோ திட்டப் பணிகளை பார்வையிட்டு பணிகளின் முன்னேற்றம், தரம் மற்றும் காலக்கெடு குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
குறிப்பாக சுமார் 101 அடி உயரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்பாலத்தில் 1354 அடி தூரத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இதை முதல்வர் பார்வையிட்டு அதன் கட்டுமான முன்னேற்றத்தை ஆய்வு செய்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகளை வெகுவாக பாராட்டினார். தொடர்ந்து, பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவடைய தேவையான அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
அதன்பின் போரூர் மெட்ரோ ரயில் நிலையம் வந்த முதல்வர் விஜய், அங்கிருந்து பூந்தமல்லி வரை ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு செய்தார். திட்டப்பணிகளை விரைந்து முடித்து ரயில் சேவையை தொடங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பூந்த மல்லி-போரூர்-வடபழனி வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின்போது நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், தலைமைச் செயலர் எம்.சாய்குமார், நிதித்துறை செயலர் எம்.சித்திக் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
மாற்றுத் திறனாளி உற்சாகம்
மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் விஜய் மாற்றுத்திறனாளி ஒருவருடன் கலந்துரையாடினார். இதுகுறித்து மாற்றுத்திறனாளி கூறும்போது, ‘‘என்னைபார்த்தவுடன் அருகில் அமர்ந்து முதல்வர் நலம் விசாரித்தார். அவரை பார்த்த ஆனந்தத்தில் பேச்சு வரவில்லை. உடல்நலத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தினார்’’ என்றார்.