

கரூர்: மக்கள் சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க, முதல்வர் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் வருகிறார். இதற்காக வெண்ணெய்மலையில் தனியார் அரங்க வளாகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. அதில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து,
தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார். பின்னர் நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விஜய் முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை உள்ளிட்ட உதவிகளை வழங்க முதல்வர் விஜய் கரூர் வருவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு வேலைக்கான உத்தரவு வழங்குவது விசாரணையைப் பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதனால் முதல்வர் கரூர் வருவதற்கான தடை நீங்கியது.
நாளை கரூர் வரும் முதல்வர் விஜய், வெண்ணெய்மலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில், 5,000 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு க்யூஆர் கோடுடன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் கலந்து கொண்டு பொதுமக்களுக்குப் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக வெண்ணெய்மலையில் உள்ள அட்லஸ் கலையரங்கில் தற்காலிக அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த அரங்கத்தை சுற்றியும், கரூர் - நாமக்கல் நெடுஞ்சாலையில் இருந்து அரங்கத்துக்கு முதல்வர் விஜய் வரும் வழியிலும் சாலையோரங்களில் தகர ஷீட்கள் கொண்டு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் ஆட்சியர் அலுவலகத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
திமுக பதாகை
முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையம், நிழற்குடைகள் ஆகியவற்றில் இருந்த திமுக பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதைக் கண்டித்து மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் எஸ்.பி.கனகராஜ் தலைமையில் திமுக கவுன்சிலர்கள், மாநகராட்சி ஆணையர் பிரித்விராஜிடம் புகார் மனு அளித்தனர்.