

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர்கள் மரிய வில்சன், வினோத் ஆகியோரைப் பாராட்டிய முதல்வர் விஜய், ‘வளமான தமிழகத்தை நோக்கி வெற்றிப் பயணம் தொடரட்டும்’ என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2026-27-ம் நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட் நேற்று முன்தினமும், வேளாண் பட்ஜெட் நேற்றும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் ஆகியோருக்கு முதல்வர் விஜய் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில்கூறியிருப்பதாவது: தமிழகத்தின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026-27-ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள வேளாண்மை துறை அமைச்சர் வினோத் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய இந்த பட்ஜெட், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதேபோல் வேளாண் பட்ஜெட், தமிழகத்தின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப்பொருட்களை பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதுடன், அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வளமான தமிழகத்தை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.