கோட் சூட் முதல் வந்தே மாதரம் வரை - முதல்வர் விஜய் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்

கோட் சூட் முதல் வந்தே மாதரம் வரை -  முதல்வர் விஜய் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்
Updated on
3 min read

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்கும் நிகழ்வு இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. காலை 10 மணிக்குதான் நிகழ்வு தொடங்கியது என்றாலும் அதிகாலை முதலே நேரு ஸ்டேடியத்தை சுற்றிலும் விழாக் கோலம் பூண்டிருந்தது.

தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தவெக தொண்டர்கள் நேற்று நள்ளிரவு முதலே குவியத் தொடங்கிவிட்டனர். அதிகாலை 7 மணியில் இருந்தே நேரு ஸ்டேடியத்துக்கு வெளியே தொண்டர்கள் பலரும் தவெக துண்டுகள் மற்றும் கொடிகளும் உற்சாகமாக காணப்பட்டனர். 

8.30 மணியளவில் இருந்தே விழா அரங்கினுள் பார்வையாளர்களும், பிரபலங்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வரத் தொடங்கினர். 

விஜய்யின் பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், விஜய்யின் உறவினர்கள் பலரும் விழா அரங்கிற்கு வருகை தந்தனர். தவெக நிர்வாகிகளாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

நடிகை த்ரிஷா வெளிர் நீல நீற புடவையில் வந்திருந்தார். அவரை விஜய்யின் அம்மா ஷோபா கட்டியணைத்து வரவேற்றார். ஆர்ப்பரித்த ரசிகர்களை பார்த்து கையசைத்த த்ரிஷா பின்னர் தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் சென்று அமர்ந்தார்.

கூட்டணி கட்சித் தலைவர்களாக மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதே போல பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், பாமக தலைவர் அன்புமணி, சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தவெக தலைவர் விஜய் தன் ஃபேவரிட் கோட், வெள்ளை சட்டை அணிந்து வருகை தந்தார். வழக்கமாக இதுவரை தமிழகத்தில் பதவியேற்ற முதல்வர்கள் அனைவரும் வேட்டி அணிந்தே பதவியேற்று வந்த நிலையில், விஜய் அந்த வழக்கத்தை தவிர்த்துவிட்டு கோட் சூட் அணிந்து வந்தது கவனம் ஈர்த்தது. அவர் அரங்கினுள் நுழைந்ததும் உள்ளே அமர்ந்திருந்த தவெக தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆராவாரம் செய்தனர். ‘டிவிகே’, ‘டிவிகே’ என்ற ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்தபோது விஜய் சென்று அவரை கட்டியணைத்து வரவேற்றார். இருவரும் ஒன்றாக மேடைக்கு வந்து அமர்ந்தனர். அருகில் அமைச்சராக பதவியேற்க இருந்த 9 எம்எல்ஏக்களும் அமர்ந்தனர்.  9.50 மணியளவில் தமிழக பொறுப்பு ஆளுநர் அரங்கிற்கு வருகை தந்தார். 

சரியாக 10 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. முதலில் ‘வந்தே மாதரம்’ பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டு, 3-வதாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. 

இதனையடுத்து தவெக தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ‘ஜோசப் விஜய் எனும் நான்’ என்று தொடங்கி தனது உறுதிமொழியை முதல்வர் விஜய் எடுத்துக் கொண்டார். 

தொடர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 

பின்னர் பதவியேற்ற கையோடு முதல்வர் விஜய், மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கான கோப்புகளில் மேடையிலேயே கையெழுத்திட்டார். தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய வாக்குறுதிகளான,வீடுகளில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப் பொருள் தடுப்புப் படை திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் கையெழுத்திட்டார்.

இதன் பிறகு முதல்வராக தனது முதல் உரையில் பேசிய விஜய், “சினிமாவில் ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகன் தான் நான். எனக்கு வாழ்க்கையில் வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன் தான். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான், என்னை வெற்றி பெறவைத்துள்ளீர்கள” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எமோஷனலாக தொடங்கிய விஜய் பின்னர் தனது வழக்கமான பாணிக்கு மாறி அதிரடியாக பேசினார். “மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன். எனக்கு அந்த அவசியம் இல்லை. அதுபோல நான் யாரையும் தப்பு செய்யவும் விட மாட்டேன். எனது அரசில் யாரும் தவறு செய்ய விடமாட்டேன். ஜெயித்துவிட்டோம் என ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என்ற என்ணம் இருந்தால், அதனை உடனே மறந்துவிடுங்கள்” என்று ஆவேசமாக தெரிவித்தார். 

இறுதியாக மேடையில் இருந்த அனைவரும் முதல்வர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். விஜய்யும் தனது செல்போனில் மேடைக்கு கீழே இருந்த தொண்டர்களை செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்டார்.

புதிய முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு சென்றார். அங்கு முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அலுவல்களை தொடங்கினார். அவருக்கு தமிழக அரசின் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கோட் சூட் முதல் வந்தே மாதரம் வரை -  முதல்வர் விஜய் பதவியேற்பு விழா ஹைலைட்ஸ்
“கஜானா காலி... அவகாசம் தேவை, வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்!” - முதல்வர் விஜய் முதல் உரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in