

தமிழகம் முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு ரேஷன் அட்டை விநியோகத்தை சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் சிந்தாமணி கூட்டுறவு நியாயவிலைக் கடையில் முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கினார். உடன் அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ், கூட்டுறவு, உணவுத் துறைச் செயலர் அமுதா.
சென்னை: தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல்வர் விஜய், முதல்முறையாக தனது பெரம்பூர் தொகுதிக்கு நேற்று சென்றார். அங்கு புதுப்பிக்கப்பட்ட பெரம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தையும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார். அங்குள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழகம் முழுவதும் 73,000 குடும்பங்களுக்கு புதிய மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து முதல்வராகப் பதவியேற்றார். கடந்த ஜூன் 1-ம் தேதி திருச்சிக்கு சென்று, தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், தான் போட்டியிட்டு வென்ற சென்னை பெரம்பூர் தொகுதிக்கு நேற்று முதல்முறையாக சென்றார். தொகுதி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வியாசர்பாடி சர்மா நகர் முதல் பிரதான சாலையில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகம் மற்றும் அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையம் ஆகியவற்றை முதல்வர் விஜய் திறந்து வைத்து பார்வையிட்டார். எம்எல்ஏ அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாய்தள வசதி, அவர்களுக்கான சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இ-சேவை மையத்தில் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக விண்ணப்பிக்க வந்த மக்களிடம் முதல்வர் கலந்துரையாடினார். விண்ணப்பித்த 5 பேருக்கு உரிய சான்றிதழ்களை உடனடியாக வழங்கினார்.
ரூ.3 கோடியில் திட்டங்கள்: எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் பெரம்பூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான தனது பரிந்துரைக் கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார். தொடர்ந்து, பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் சிந்தாமணி கூட்டுறவு நியாயவிலைக் கடையைப் பார்வையிட்டார்.
தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் 73 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய மின்னணு ரேஷன் அட்டைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்குபுதிய ரேஷன் அட்டைகளை வழங்கினார். அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்களையும் வழங்கினார்.
திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததை அடுத்து, மாவட்டங்களுக்குரிய ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய ரேஷன் அட்டைகளை அந்தந்த மாவட்டங்களில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வியாசர்பாடியில் ரூ.47.50 கோடியில் செயல்பட்டுவரும் மாநகர் போக்குவரத்துக் கழகமின்சாரப் பேருந்து பணிமனையையும் முதல்வர் பார்வையிட்டார். பேருந்துகளுக்கு எவ்வாறு சார்ஜ் ஏற்றப்படுகிறது என்பதையும் பார்வையிட்டு, அதுகுறித்து கேட்டறிந்தார்.
முதல்வர் அறிவுறுத்தலின்படி மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில், இனிவரும் காலங்களில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுபயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகளில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, வெங்கடரமணன், விஜய் தமிழன் பார்த்திபன், காந்திராஜ், குமார், எம்எல்ஏக்கள், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, போக்குவரத்து துறைச் செயலர் வள்ளலார், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஆனந்த், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
2.28 கோடி குடும்ப அட்டைகள்: தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தம் 318 தாலுகாக்கள் உள்ளன. இதில் 34,908 நியாயவிலைக் கடைகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலவரப்படி 2 கோடியே 28 லட்சத்து 53 ஆயிரத்து 037 ரேஷன் அட்டைகள் உள்ளன. இவற்றின் மூலம் மொத்தம் 7.01 கோடிக்கு மேற்பட்டோர் பயன்பெறுகின்றனர். இதில், அந்த்யோதயா அன்னயோஜனா (ஏஏஒய்) திட்டத்தின் கீழ் 18.62 லட்சம் ரேஷன் அட்டைகள் மூலம் 61.76 லட்சம் பயனாளிகள் உள்ளனர். மேலும், 99.44 லட்சம் முன்னுரிமை ரேஷன் அட்டைகள் (பிஎச்எச்) வாயிலாக 3.02 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.