

சென்னை: அனைத்துக் குற்றங்களுமே கடந்த 100 நாட்களில் நடந்தவை அல்ல; ஒவ்வொரு குற்றத்துக்குப் பின்னாலும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதல்வர் விஜய் நேற்று பதில் அளித்து பேசியதாவது: முதல்வராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், அதிகாரிகளாக இருந்தாலும், எந்த அரசியல் அதிகாரத்துக்கும் காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் தேவையற்ற தலையீடு இருக்கக்கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்தியுள்ளேன்.
ஒரு குற்றம் நடைபெற்றுவிட்டது என்பதற்காக மட்டுமே ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று கூறிவிட முடியாது. தனிப்பட்ட குற்றச் சம்பவத்துக்கும், மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது.
ஏனெனில், அனைத்துக் குற்றங்களும் கடந்த 100 நாட்களில் நிகழ்ந்தவை அல்ல. ஒவ்வொரு குற்றத்துக்குப் பின்னாலும் ஒரு குடும்பப் பிரச்சினை, சொத்து தகராறு, முன் விரோதம், பழிவாங்கும் மனநிலை, போதைப்பொருள் பயன்பாட்டின் தாக்கம் என எதுவாகவும் இருக்கலாம்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட சட்டத்தின் மீது பயமில்லாதது, சிலரின் ஆதிக்கத்தின் கீழ் காவல்துறையின் செயல்பாடு, போதை கலாச்சார வளர்ச்சி போன்றவைகளும், சமூகக் கட்டுப்பாடு குறைதல், சாதி அடையாளம், நிலம் மற்றும் அதிகாரத்தின் மீதான போட்டி, கலப்புத் திருமணத்துக்கு எதிர்ப்பு, உள்ளூர் அதிகாரப் போட்டி, அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கம், சமூக வலையமைப்புகளின் தாக்கம் போன்ற பல்வேறு சமூகக் காரணிகளும் குற்றங்களுக்குப் பின்னணியாக இருக்கலாம்.
இன்று சைபர் குற்றங்களும் நவீன சட்டம் ஒழுங்கின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளன. எனவே, சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கு அனைவருக்கும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த கல்வி வழங்கப்பட வேண்டும். ‘போதைக் கலாச்சாரம்’ என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையும் குறைகூறிவிட்டு நாம் தப்பித்துக்கொள்வது ஒரு சிறந்த தலைமைப் பண்பு அல்ல.
இது போன்ற சம்பவங்களால் மாணவனின் உயிர் போனது மட்டுமில்லாமல், அதில் சம்பந்தப்பட்ட அனைவரின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி விடுவதை மாணவர்கள் உணரவில்லை எனில், அவர்களுக்குச் சரியான பாதை இதுவரை வகுத்துத் தரப்படவில்லை என்பதுதான் உண்மை. இதற்கும் 100 நாட்களான இந்த அரசா காரணம்?
நான் பதவியேற்ற முதல் நாளே மக்களுக்கு ஊழலற்ற, வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதேஇந்த அரசின் முதன்மையான நோக்கம் என்று தெளிவாக, உறுதியாகக் கூறியுள்ளேன். போதைப்பொருள் கலாச்சாரம் கடந்த ஆட்சியாளர்களால் கவனிப்பாரற்று இருந்ததால் தற்போது ஆழமாக வேறூன்றிமரமாக வளர்ந்து நிற்கிறது. போதை என்கிற முழு மரத்தையும் வேரோடும் வேரடி மண் ணோடும் அகற்ற வேண்டும். அது ஒரு நாளிலோ 100 நாட்களிலோ முடியும் பணியல்ல.
காவலர்களின் பணிச்சுமையைக் குறைத்தல், ஊதிய ஓய்வு மற்றும் விடுப்பு வழங்குதல், மனநல ஆலோசனை, மருத்துவப் பரிசோதனை உள்ளிட்ட நலத்திட்டங்களை வலுப்படுத்தி, பணியின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களைத் துறைவாரியாகவும், மாவட்டவாரியாகவும் கணக்கிட்டுத் தேவையான பணியிடங்களை முன்னுரிமை அடிப்படையில் நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
முந்தைய ஆட்சியில் பல்வேறு இனங்களில் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக உடனடியாக கைது செய்யப்படாமலும், வழக்கு தாமதமாகவோ அல்லது வழக்குப்பதிவு செய்யப்படாமலோ இருந்தார்கள். ஆனால், தவெக ஆட்சியில் எவ்வித பாகுபாடும் இன்றி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆளுங்கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் பேசினார்.