

சென்னை: ‘விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, கூட்டுறவு வங்கிகளில் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்’ என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை மே 25-ம் தேதி முதல்வர் விஜய் வெளியிட்டார்.
அதன்படி கூட்டுறவு வங்கிகளில் ரூ.50 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு (2.5 ஏக்கர் நிலம் வைத்திருப்போர்) கடன்தொகை முழுமையாகவும், ரூ.50 ஆயிரம் வரைகடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு (2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர்வரை) 50 சதவீதமும், பெரு விவசாயிகளுக்கு (5 ஏக்கருக்கு மேல்) தலா ரூ. 5 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதில் அதிருப்தி அடைந்த விவசாயிகள், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் தவெக தனது தேர்தல் வாக்குறுதியை மீறியுள்ளதாகவும் குற்றம் சாட்டின.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் விஜய் நேற்று அறிவித்தார்.
முதல்வர் ஆலோசனை
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை மறு ஆய்வு செய்யும் வகையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் (திங்கள்) முதல்வர் விஜய் தலைமையில் வேளாண்மைத் துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் 28.11.2025-ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின் படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின் படியும், தமிழக அரசின் இன்றைய நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை பயிர்க்கடனை, ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி செய்ய முதல்வர் உத்தர விட்டுள்ளார்.
14.43 லட்சம் பேர் பயன்
அதன்படி, குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை 100 சதவீதமும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் ரூ.35 ஆயிரமும் தள்ளுபடி செய்யப்படும். இதன்மூலம் விவசாயி களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரமும், குறைந்தபட்சமாக ரூ.35 ஆயிரமும் பணப்பயன் கிடைக்கும்.
8 லட்சத்து 33 ஆயிரத்து 773 குறு விவசாயிகளுக்கு ரூ.3,599.67 கோடி, 5 லட்சத்து 1,183 சிறு விவசாயிகளுக்கு ரூ.1,995.42 கோடி, 93,548 இதர பெரு விவசாயிகளுக்கு ரூ.337.15 கோடி என ஒட்டுமொத்தமாக 14 லட்சத்து 43 ஆயிரத்து 504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர் கடன் தள்ளுபடி தொகையாக ரூ.5,932.23 கோடி கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.