

சென்னை: மணிப்பூரைச் சேர்ந்த இளம் காலநிலை ஆர்வலர் லிசிப்ரியா கங்குஜம் தனது எக்ஸ் பக்கத்தில், ‘நாற்காலிகளில் வெள்ளைத் துண்டுகளை வைக்கும் வழக்கம் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மட்டுமல்லாமல் கீழ்நிலை அதிகாரிகளாலும் பரவலாக பின்பற்றப்படுகிறது. முதல்வர் விஜய் முன்மாதிரியாக திகழ வேண்டும். இந்த வழக்கத்தை கைவிடுவதன் மூலம் ஒரு அடையாளப்பூர்வமான மாற்றத்தைத் தொடங்க வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நேற்று முன்தினம் டாஃபேவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மல்லிகா சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் லட்சுமி வேணு ஆகியோருடன் விஜய் நடத்திய சந்திப்பின்போது வெளியிடப்பட்ட புகைப்படங்களில் முதல்வரின் நாற்காலியில் வெள்ளை துண்டு இல்லாமல் இருந்ததது.
இதையடுத்து அந்தப் படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள லிசிப்ரியா கங்குஜம், முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், தனது பதிவில், ‘சாமானிய மக்களின் குரல்களை நீங்கள் செவிமடுக்கிறீர்கள் என்பதை உங்கள் செயல் நிரூபிக்கிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், மாற்றம் வரப்போகிறது’ என தெரிவித்துள்ளார்.