

சென்னையில் நேற்று நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
“அதிமுக என்ற கட்சியோடு சேர்த்து உங்கள் மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டீர்களா” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு விழா, அமைந்தகரையில் நேற்று நடைபெற்றது. திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு தலைவர் டி.பி.எம்.மொகிதீன் கான் தலைமையில் நடந்த இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறுபான்மையினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தமிழக அரசின் தலைமை காஜி ரமலான் நோன்பை திறந்து வைத்தார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுகவுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இருக்கக்கூடிய உறவு இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. இந்த இயக்கம் தொடங்கியது முதல் உண்டான உறவு. காயிதே மில்லத் காலம் முதல் அண்ணா, கருணாநிதி, இப்போது நான் என தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. நம்மை யாராலும் ஒருநாளும் பிரிக்க முடியாது. திமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பட்டியல் என்பது மிக நீளமானது. உங்களுக்கு எப்போதெல்லாம் என்ன தேவைப்பட்டாலும், அதை செயல்படுத்துவது தான் திமுக.
பெண்களே மிகப்பெரிய பலம்: திமுக அரசின் மிகப்பெரிய பலமே பெண்கள் தான். அதிலும் இஸ்லாமிய பெண்கள் நம் கூட இருக்கும்போது நம்முடைய பலம் இன்னும் பலமடங்கு பெருகும். இஸ்லாமிய மக்களுக்கான அனைத்து அமைப்புகளுக்கு இடையேயும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது திமுக தான். இந்த ஒற்றுமைதான் தமிழகத்துக்கு அவசியம். இதற்கு நேர்மாறான நிலைமை பாஜக ஆளக்கூடிய மாநிலங்களில் இருக்கிறது. முஸ்லிம்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் கூட நிம்மதியாக கிறிஸ்துமஸை கொண்டாட முடியவில்லை.
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறையை பற்றி, என்றாவது எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கருத்து சொல்லியிருக்கிறாரா? பழனிசாமியிடம் நான் கேட்பதெல்லாம், அதிமுக என்ற கட்சியோடு சேர்த்து உங்கள் மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டீர்களா? சிறுபான்மையினர் மீதான வெறுப்பை தூண்டிவிட்டு, அதில் குளிர்காயக்கூடிய பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் நீங்கள் எப்படி சிறுபான்மையினரின் உரிமையையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுவீர்கள்?
பழனிசாமி மட்டுமல்ல, பலரும் இப்படித்தான் நோன்பு திறக்கும் ஒரு நாள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். ஆனால் இஸ்லாமியருக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அமைதியாகி விடுவார்கள். ஓடி ஒளிந்து கொள்வார்கள். எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இஸ்லாமியருடைய உரிமைகளுக்காக முதல் ஆளாக குரல் கொடுப்பது திமுக தான்.
களத்தில் இறங்கி போராடுகிறது. சட்டப்பேரவையிலும் தீர்மானத்தை நிறைவேற்றுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. இதனாலதான் சிறுபான்மையின மக்களும் திமுகவுக்கு துணையாக நிற்கின்றனர். இந்த ஒற்றுமை எந்நாளும் தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நாளை முதல் திமுக நேர்காணல்: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் 17-ம் தேதி (நாளை ) முதல் 22-ம் தேதி வரை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது. 17-ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்துக்கும், 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தமிழகத்துக்கு மாவட்ட வாரியாகவும் நேர்காணல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.