

நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.
ராமேசுவரம் / சென்னை: தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளைச் சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த மீனவர்கள் 22 பேரை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர்.
இதில் அலேக்ஸ் டேனியல், அந்தோணி கிருமிராஜ் ஆகியோரது இரு விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.
பின்னர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, இரு படகுகளில் இருந்த விமல்ராஜ், தபோன் ராஜா, பாக்கியராஜ், தீபக், ஆரோக்கிய பிரான்சிஸ், இம்மானுவேல், சந்தியா ஸ்டூவர்ட், பாக்லின், அந்தோணி குணால், காளிதாஸ், சந்தியா ஆல்டன், வின்சர் ஆகிய 12 மீனவர்களை கைது செய்து, காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்பேரில் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இதேபோல, மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற வெங்கடேசன் என்பவரது விசைப்படகில் இருந்த புவனேஷ் நம்பு, முருகராஜ், ஜூட், ராமகிருஷ்ணன், அருள்தாஸ், பழனிசாமி ஆகிய 6 மீனவர்களை, தலைமன்னார் பகுதியில் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.
மேலும், மலைராஜன் என்பவரது விசைப்படகைப் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த ராமசாமி, நாகூர் கண்ணன், பாலசுப்பிரமணியன், ராஜாமணி ஆகிய 4 மீனவர்களைக் கைது செய்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட 10 மீனவர்களையும் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இலங்கை கடற்படையினர், பின்னர் வவுனியா சிறையில் அடைத்தனர்.
சிறையில் 104 மீனவர்கள்... மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்வது, அவர்களது குடும்பத்தினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது 104 மீனவர்கள் இலங்கை சிறைகளில் உள்ளனர். அதேபோல, பிப்ரவரி முதல் வாரத்தில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இலங்கை காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட அனைத்து மீனவர்களும் தாயகம் திரும்புவதற்கும், தற்போது கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிப்பதற்கும் உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.