

சென்னை: தமிழகத்தில் 23 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.69 கோடியில் கட்டப்படவுள்ள முதல்வர் சிறு விளையாட்டு அரங்கங்களின் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மீன்வளத்துறை சார்பில் ரூ.98.92 கோடியில் மேம்படுத்தப்பட்ட துறைமுகங்களையும் திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2021-22ம் ஆண்டு பட்ஜெட்டில், விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டரங்கங்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூன்றாம் கட்டமாக, 44 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல்வர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் – பர்கூர் மற்றும் தளி, தஞ்சாவூர்- பேராவூரணி, திருவையாறு மற்றும் ஒரத்தநாடு, கோயம்புத்தூர்- கிணத்துக்கடவு, திருச்சிராப்பள்ளி – மணப்பாறை, விழுப்புரம் - செஞ்சி, திண்டிவனம் மற்றும் திருக்கோவிலூர், சென்னை - மதுரவாயல், திரு.வி.க.நகர் மற்றும் பெரம்பூர் , விருதுநகர்- திருச்சுழிமற்றும் ராஜபாளையம், காஞ்சிபுரம் - திருப்பெரும்புதூர், திருவாரூர் – நன்னிலம் மற்றும் திருத்துறைபூண்டி, கரூர் – குளித்தலை, செங்கல்பட்டு – ஆலந்தூர் , கன்னியாகுமரி - கிள்ளியூர்,சேலம் - சங்ககிரி, எடப்பாடி என 23 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.69 கோடி மதிப்பில் முதல்வர் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலிவாயிலாக அடிக்கல் நாட்டினார்.
மீன்வளத்துறை: மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.60 கோடியில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பெரியநாயகி தெரு மீனவ கிராமத்தில் ரூ.26 கோடியில் தூண்டில் வளைவுடன் மீன் இறங்குதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் ரூ.10 கோடியில் மீ்ன் பிடிதுறைமுகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கடானா கிராமத்தில் ரூ.2.92கோடியில் அரசு மீன்விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.98.92 கோடி மதிப்புள்ள இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் நா. முருகானந்தம்,மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர்ந.கவுதமன், விளையாட்டுத்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா,ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.