

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (டிச.9) முதல் 14-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் 12-ம் தேதி வரை பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் ஊத்துவில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.