

சென்னை: டிட்வா புயல் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதங்கள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், தற்போது பெய்துவரும் மழையால், வேளாண் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர் சேதம், இதர பயிர்கள் சேதம் குறித்தும், தோட்டக்கலை பயிர்கள் சேதம் குறித்தும் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி, அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ளநீர் வடிவதற்கான அனைத்து பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
மேலும் கடந்த அக்டோபரில் பெய்த மழையால் ஏற்பட்ட பயிர் பாதிப்புகளுக்கான கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்து, 33 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட 4,235 ஹெக்டேர் பயிர்களுக்கும் 345 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். டிட்வா புயல் காரணமாக குடிசை வீடுகள் மற்றும் இதர வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடைகள் பலி போன்றவற்றுக்கு இழப்பீடை மாவட்ட ஆட்சியர்கள் விரைந்து வழங்க வேண்டும்.
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 39 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். இப்பணிகளை தேவைப்படும் காலம் வரை தொடர்ந்து செய்துதர வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
ஏற்கெனவே, கடந்த நவ.28-ம் தேதி அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலமாக ஆய்வு முதல்வர் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, தற்போது டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்து வருவதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்சேதம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தக் கூட்டத்தில் தலைமை செயலர் நா.முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் எம்.சாய்குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் பெ.அமுதா, ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை இயக்குநர் பா.முருகேஷ், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: டிட்வா புயல் தொடர் மழையினால் கூடுதல் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் டெல்டா விவசாயிகளை காப்போம். அக்டோபர் தொடங்கி, தற்போது வரையிலான கனமழையால் சேதமடைந்துள்ள பயிர்கள், வீடுகள், மனித உயிரிழப்புகள், கால்நடை பலி ஆகியவற்றுக்கு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறியுள்ளார்.