

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நேற்று காலை நடை பயிற்சியின்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
புதுக்கோட்டை: நடிகரின் பின்னால் செல்லும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து புதுக்கோட்டையில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். முன்னதாக, புதுக்கோட்டையில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் கடைவீதியில்கூடியிருந்த பொதுமக்களிடமும், பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடமும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது. ஏற்கெனவே, 200 தொகுதியில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்து இருந்தோம். தற்போதுள்ள மக்கள் வரவேற்பையும், கூட்டத்தையும் பார்க்கும்போது, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் தோல்வி என்பதால் அதிமுக பொதுச் செயலாளர் விரக்தியின் உச்சத்துக்கு சென்றுவிட்டார். அதிமுகவை டெல்லியில் அடமானம் வைத்து, அக்கட்சியியை அடிமையாகிவிட்டார். அவர்களை டெல்லிதான் ஆட்சி செய்கிறது. அதிமுக என்ற திராவிட கட்சி இப்படி போனதை நினைத்து வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.
தற்போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றி உள்ளனர். இதுபோன்று எதை வேண்டுமானாலும் செய்யட்டும். இதற்கு மேலும் செய்வார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். நடிகர் உள்ளிட்ட யார் வந்தாலும் கவலைப்படாமல் எங்கள் வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
நடிகரின் பின்னால் இளைஞர்கள் சென்று விபத்துகள் நேரிடுவதை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதனால், நடிகர் பின்னால் செல்லும் இளைஞர்கள் விரைவில் திருந்துவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.