

முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, சைதாப்பேட்டை தொகுதியில் வேட்பாளர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து நடந்து சென்று பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
திமுக 200 தொகுதிகளில் உறுதியாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இறுதிநாளான நேற்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், சென்னையில் வில்லிவாக்கம் மற்றும் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
வில்லிவாக்கம் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “திமுக ஆட்சி அமைந்த பிறகு 90 சதவீதத்துக்கு மேலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மிச்சமுள்ள உறுதிமொழிகூட மத்திய அரசு நிதி தராததால் தடைப்பட்டது. எனினும், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினோம்.
முதலில் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை, ஆட்சிக்கு வர முடியாது என்றார்கள். ஆனால் வந்தோம். இப்போது திமுக தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சிக்கு வந்ததில்லை என கூறுகிறார்கள். இந்த விமர்சனத்தை உடைத்து மீண்டும் ஆட்சி அமைப்போம். பதவிக்காக இல்லை, ஒட்டுமொத்த தமிழகத்துக்காகதான் கூறுகிறேன். எனவே, 2-வது முறையாக என் தலைமையில் திமுக ஆட்சி அமைய வாக்களிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து கொளத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் நான் முதல்வராக இருந்தாலும், கொளத்தூர் எனது செல்லக் குழந்தை. இந்த தொகுதிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளேன். அந்த பணிகள்தான் எனக்காக இங்கு ஓட்டு கேட்டிருக்கின்றன. ஏற்கனவே ஒரு மாடல் தொகுதியாக கொளத்தூரை மாற்றி வைத்திருக்கிறேன். இன்னும் சிறப்பாக கொளத்தூரை மேம்படுத்துவேன்.
அதிமுகவிடம் ஆட்சி சென்றால், டெல்லி ரிமோட் கன்ட்ரோல் ஆட்சிதான் நடைபெறும். நமது அனைத்து திட்டங்களும் நின்றுபோய்விடும். மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடனே இல்லத்தரசி திட்டத்துக்குதான் முதல் கையெழுத்து. இதேபோல், 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொண்ட தொலைநோக்கு ஆவணமாக நம் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டில் அதையெல்லாம் நிறைவேற்றிவிட்டு, 2031 தேர்தலின்போது வாக்கு கேட்டு நான்தான் மீண்டும் வருவேன். இது சத்தியம். திமுக 200 தொகுதிகளில் உறுதியாக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட காணொலியில், “நமது தமிழகத்தின் எதிர்காலத்தை நீங்கள் எழுதப்போகும் நாள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. உங்களுக்கு தெரியும். எது உண்மை? எது பொய்? எது நடிப்பு? எது உழைப்பு? யார் நரி? யார் சிங்கம்? அடிமைத்தனம் எது? தைரியம் எது? அனைத்துமே உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
நாம் வீழ்த்திய எதிரிகளின் சதிகளை எண்ண ஆரம்பித்தால், அதற்குள்ளாக தேர்தல் முடிவே வந்துவிடும். நமது திட்டங்களை, அதனால் விளைந்த நன்மைகளை நான் பட்டியலிட ஆரம்பித்தால், அடுத்த தேர்தலே வந்துவிடும்.
எனக்கு நீங்கள் கொடுத்த கடமையை என்னால் முடிந்த வரைக்கும் சரிவரச் செய்துவிட்டேன். உங்கள் கடமையை நீங்களும் சரிவர செய்ய வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இதுவரை யாரும் காணாத ஒரு பெரிய கனவோடு காத்திருக்கிறேன். இனி நமது போட்டி டெல்லியுடன் மட்டும் இருக்காது. தெற்காசியாவில் அனைத்துத் துறைகளிலும் முதல் மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டுவேன். மண், மொழி, மானம் மூன்றையும் காப்பாற்ற மூச்சு இருக்கும் வரைக்கும் போராடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.