

திருவண்ணாமலை நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் புது சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும், செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 18 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டித்தரப்படும் உள்ளிட்ட 6 அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி, கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் இன்று (டிச.27) கலந்து கொண்டார். அந்நிகழ்வில், அவர் முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:
* திருவண்ணாமலை மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக சேத்துப்பட்டு வட்டம், ஏந்தல் கிராமத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 37 ஏக்கரில், புது சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
* கலசப்பாக்கம் வட்டம், பருவதமலை அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயிலுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
* புதிதாக தொடங்கப்பட்டிருக்கின்ற செங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு, 18 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டப்படும்.
* வந்தவாசி வட்டம் கீழ்-சீசமங்கலம் கிராமத்தில், 2.02 ஹெக்டேர் பரப்பில் வீரிய ஒட்டு ரக குழித்தட்டு காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து வழங்கக்கூடிய வகையில், புதிய உயர் தொழில்நுட்ப நாற்றங்கால் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். இதன்மூலம் கீழ் சீசமங்கலம் மற்றும் அருகாமையில் இருக்கக்கூடிய அனைத்து கிராம விவசாயிகளும் பயனடைய இருக்கிறார்கள்.
* வேளாண்மை - உழவர் நலத்துறையின் திட்டங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், தரமான இடுபொருட்கள் மற்றும் வேளாண் சார்ந்த அனைத்துச் சேவைகளையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்றுப் பயனடையக்கூடிய விதமாக, திருவண்ணாமலை மாவட்டம் மழையூரில், 3 கோடியே 94 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.
* திருவண்ணாமலை மாவட்டம், அத்தியேந்தலில், நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற பயிர்களின் உயர்விளைச்சல் ரக சான்றளிக்கப்பட்ட - தரமான விதைகளை விவசாயிகளுக்கு காலத்தே வழங்கிட, 250 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட, சேமிப்புக் கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையம் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.