“கல்வி, கல்வி நிறுவனங்களை பலவீனப்படுத்த பாஜக - ஆர்எஸ்எஸ் சதி” - ராகுல் காந்தி

Rahul Gandhi about BJP - RSS nexus
ராகுல் காந்தி
Updated on
1 min read

புதுடெல்லி: கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை பலவீனப்படுத்த பாஜக - ஆர்எஸ்எஸ் கூட்டணி சதி செய்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், “சமீபத்தில் ‘மக்கள் நாடாளுமன்றத்தில்’ ( Students' Parliament ) இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (ISI) மாணவர்களைச் சந்தித்தேன். நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து எழுப்பி வரும் அதே தீவிரமான கவலைகளை அந்த மாணவர்களும் எழுப்பினர்.

ஐஎஸ்ஐ நிறுவனம் படிப்படியாக ஆர்எஸ்எஸ் மூலம் நிறுவன ரீதியாகக் கையகப்படுத்தப்பட்டு வருவதாக மாணவர்கள் தெரிவித்தனர். ஐஎஸ்ஐ என்பது ஏதோ ஒரு சாதாரண நிறுவனம் அல்ல. அது புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், தரவு அறிவியல், கணினி அறிவியல் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றில் உயர் மட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நாட்டுக்கு உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்கியுள்ளது.

கல்வியாளர்களால் நடத்தப்பட வேண்டிய கல்வி நிறுவனங்கள் இப்போது அதிகாரத்துவ மற்றும் சித்தாந்தத் தலையீட்டை எதிர்கொள்கின்றன. பாடத்திட்டமும் ஆராய்ச்சியும் கூட ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இது கல்விச் சீர்திருத்தம் அல்ல, மாறாக இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளுவதற்காகவும், கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கான ஒரு சதித்திட்டம். இந்தத் தாக்குதல் நிறுவனங்கள் மீது மட்டுமல்ல, நாட்டின் அறிவுசார் சுதந்திரம், அறிவியல் மனப்பான்மை மற்றும் அதன் இளைஞர்களின் எதிர்காலத்தின் மீதும் தொடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கல்விக்கு சுதந்திரம் தேவை - நிறுவனங்கள் சித்தாந்தத்தால் அல்ல, அறிவு மற்றும் அறிவியலால் இயக்கப்படும்.” என்று கூறினார்.

ராகுல் காந்தி பேஸ்புக் பதிவில், அமெரிக்காவால் விதிக்கப்பட்ட வரிகளின் விளைவாக பதோஹியைச் சேர்ந்த நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறினார். அவர், “நான் ஏற்கனவே கூறியிருந்தேன் - 'ட்ரம்ப்பின் வரிகள் ஒரு பொருளாதாரப் புயலாக மாறப்போகின்றன, இது மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும். ஆனால் நரேந்திர மோடி அமைதியாக அமர்ந்திருக்கிறார். இன்று, பதோஹியின் நெசவாளர்கள் அதே எச்சரிக்கையின் யதார்த்தத்தை எடுத்துரைக்கிறார்கள். ஒரு காலத்தில் ‘கம்பள நகரம்’ என்று அழைக்கப்பட்ட பதோஹி, இப்போது அவதூறுக்கு ஆளாகியுள்ளது.

அமெரிக்காவின் இந்தியாவுக்கு எதிரான வரி விதிப்புக் கொள்கை நாட்டின் பல தொழில்களில் பயங்கரமான விளைவை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பதோஹியின் கம்பள வர்த்தகம் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவாக, ஏற்றுமதி சீராகக் குறைந்து வருகிறது. இந்த வர்த்தகம் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளுக்கு மாறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியின் உண்மை நிலை இதுதான்.” என்று கூறினார்.

Rahul Gandhi about BJP - RSS nexus
‘‘சூப்பர் மேனைவிட ஹனுமன் வலிமையானவர்’’ - அறிவியல் மாநாட்டில் சந்திரபாபு நாயுடு பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in