

சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களுக்கு வரும் மக்களுக்கு குடிநீர், கழிப்பறை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆக.2-ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த உயர் மருத்துவ சேவை சிறப்பு முகாம் ஒன்றுக்கு ரூ.1.08 லட்சம் வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்களுக்கு ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்முகாம்களில் 40 வயதுக்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சி குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக-பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இதுவரை 632 முகாம்கள் நடத்தப்பட்டதில் 9 லட்சத்து 86,732 பேர் பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் எஸ்.மதுமதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் க.லட்சுமி பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் பேசும் போது, முகாம்களுக்கு வரும் மக்களுக்கு குடிநீர், இருக்கை வசதிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முகாம்களுக்கு வரும் மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கிட போதுமான அளவுக்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.
முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து குறித்து விளம்பரம் செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும். மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்படுபவர்கள் தொடர் சிகிச்சை பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.