

சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் ஜீவா நினைவரங்கை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில் அமைச்சர்கள் சிவ.வீ.மெய்யநாதன், மு.பெ.சாமிநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர். | படம்: எல்.பாலச்சந்தர் |
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பொதுவுடைமைவாதியும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஜீவா நினைவரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் அருகே சிறாவயலில் பொதுவுடைமைவாதியும், சுதந்திர போராட்ட தியாகியுமான ப.ஜீவானந்தத்தை (ஜீவா) காந்தியடிகள் சந்தித்த இடத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ரூ.3.27 கோடியில் நினைவரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஜீவா நினைவரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த காந்தியடிகள், ஜீவா சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர். எஸ்.ராஜகண்ணப்பன், மு.பெ.சாமிநாதன், சிவ.வீ.மெய்யநாதன், செய்தி மக்கள் தொடர்புத்துறை செயலர் ராஜாராமன், இயக்குநர் வைத்தியலிங்கம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்எல்ஏ, துணை மேயர் குணசேகரன் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: காந்தியடிகள் -ஜீவா சந்தித்த இடத்தில் நினைவரங்கமும், உருவச் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன. வெறும் நினைவரங்காக மட்டுமில்லாமல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையிலான திருமண மண்டபமாகவும் கட்டியுள்ளோம்.
இப்பகுதியில் ஆசிரமம் அமைத்து ஜீவா தங்கியிருந்தபோது, அவரை சந்தித்த காந்தியடிகள், ‘உங்களுக்கு என்ன சொத்து இருக்கிறது?’ என்று கேட்டுள்ளார். அதற்கு, ‘தாய் நாடுதான் எனது சொத்து’ என்று ஜீவா தெரிவித்துள்ளார். அதற்கு காந்தியடிகள், ‘நீங்கள்தான் இந்தியாவின் சொத்து’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப சென்னை கன்னிமாரா நூலகத்தில் காரல் மார்க்ஸ் சிலை பிப். 6-ம் தேதி திறக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். அதைத்தொடர்ந்து குன்றக்குடி சென்ற முதல்வருக்கு வெள்ளி செங்கோலை அளித்து பொன்னம்பல அடிகளார் வரவேற்றார்.
குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்த முதல்வர், நூற்றாண்டு மலரை வெளியிட்டார். குன்றக்குடி அடிகளார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், காரைக்குடி கழனிவாசலில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட வீறுகவியரசர் முடியரசனாரின் சிலையை முதல்வர் திறந்து வைத்தார். முன்னதாக திருப்பத்தூருக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.