

மழை
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு திடீர் மழை பெய்தது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் பனி பொழிவும் அதிகமாக உள்ளதால் வனங்கள், தேயிலை தோட்டங்கள் கருகி வருகின்றன. கோடையில் பசுமையை காண்பதே அரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட மக்கள் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.
நேற்று இரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது. ஊட்டி, குந்தா, கோத்தகிரி, குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. பிற இடங்களில் மழையின் அளவு சற்று குறைந்தே காணப்பட்டது. எனினும், இன்று பகலிலும் கடும் மேக மூட்டத்துடன், அவ்வப்போது சாரல் மழை பெய்தது. கடும் மேக மூட்டம் காரணமாக பகல் நேரங்களிலேயே எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில், முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே சென்றனர்.
மேலும், ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர். பல மாதங்களுக்கு பின் ஊட்டியில் மழை தலைகாட்டிய நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஊட்டி-கோத்தகிரி சாலையில் கோத்தகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மரத்தை வெட்டி அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது.
மாவட்டத்தில் மாலை நிலவரப்படி குன்னூர் 44, கோடநாடு 39, கோத்தகிரி 31, கிணக்ணக்கொரை 24, குந்தா 22, அவலாஞ்சி 20, எமரால்டு 20, ஊட்டி 17, கீழ் கோத்தகிரி 15, கெத்தை 15, மி.மீ., மழை பதிவானது.