

சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு கோரோஹெல்த் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், மகாராஷ்டிரா, கர்நாடக, கேரள மாநிலங்களில் அலுவலகங்களை கொண்டுள்ளது. அண்மையில் கேரள அலுவலகத்தில் 900-க்கும் அதிகமான ஊழியர்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்துள்ளது.
இழப்பீடு மற்றும் பணிநீக்கம் தொடர்பாக சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை எதிர்த்து ஊழியர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த மாநில உயர் நீதிமன்றம், மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண அறிவுறுத்தியது.
இதனைத் தொடர்ந்து அரசு 2 முறை அழைப்பு விடுத்தும் கோரோ ஹெல்த் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் உள்ளது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள தபால் அலுவலகம் அருகே சிஐடியு தென்சென்னை மாவட்டக்குழுவும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சார்பு ஊழியர்கள் சங்கமும் (யுனைட்) இணைந்து சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ.முருகானந்தம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
இதில், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணிவழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஜி.செந்தில்குமார், பொருளாளர் ஏ.நடராஜன், யுனைட் பொதுச்செயலாளர் அழகுநம்பி வெல்கின், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.