“தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே முதல்வர் விஜய் பேசுகிறார்” - எழிலன் விமர்சனம்

எழிலன் | கோப்புப் படம்

எழிலன் | கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: “முதல்வர் விஜய் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே பேசுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்கான தெளிவான ‘விஷன் ஸ்டேட்மென்ட்’ வழங்க வேண்டும்” என்று திமுகவின் எழிலன் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம அவர் கூறியது:“டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் அவசர அவசரமாக காரில் ஏறிப் போன முதல்வர் விஜய் இன்று திருச்சியில் பொதுமக்களுக்குப் பதிலாகக் ‘கேப்டிவ் ஆடியன்ஸ்’ எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த பிறகு ஊடகவியலாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், முதல்வர் விஜய் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் காரில் ஏறித் தப்பிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அண்ணா கூறியதைப்போல, ‘எதிர்க்கட்சியாக இருக்கும்போது கிண்ணத்தை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம்; ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆட்சி என்பது நெய்க் கரன்டியைப் போன்றது, அதனைச் சிந்தாமல் கையாள வேண்டும்’. முதல்வர் விஜய் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே பேசுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்கான தெளிவான ‘விஷன் ஸ்டேட்மென்ட்’ வழங்க வேண்டும்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதந்தோறும் மின்கட்டணம் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்காமல், இன்னும் இரு மாதங்களுக்கு ஒருமுறைக் கட்டணம் வசூலிப்பதையும், அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் மக்களை ஏமாற்றாமல், 2006-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி நிபந்தனையின்றி 7,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்த அரசாணையை முதல்வர் விஜய் படித்துப் பார்க்க வேண்டும்.

மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளைத் தாம் தொடர்வதாகக் கூறிவரும் முதல்வர் விஜய், புதியதாக தமிழ்நாட்டுக்கு என்ன செய்யப்போகிறார்?.

100 யூனிட் இலவச மின்சாரத்தின் தொடக்கம் 1989-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கிய இலவச மின்சாரத்தில்தான் உள்ளது. தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆணவப் படுகொலைகள் குறித்துக் கேள்வி எழுப்புகிறோம். முன்பு திமுகவை நோக்கி விஜய் எழுப்பிய கேள்விகள் இப்போது அவரிடமே ‘பூமராங்’ ஆகத் திரும்பி வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்தைவிட ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் மாநில உரிமைகளை முதல்வர் விஜய் விட்டுக் கொடுக்கிறாரா? மேகேதாட்டு மற்றும் மும்மொழிக்கொள்கை குறித்து அவர் ஏன் மவுனம் காக்கிறார்?. முதல்வர் விஜய் தமது அமைச்சர்களை ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அறிவுறுத்த வேண்டும். வெறும் ரசிகர்மன்றத் தலைவராகச் செயல்படாமல் பொறுப்புள்ள முதல்வராகச் செயல்பட வேண்டும்” என்று எழிலன் கூறினார்.

<div class="paragraphs"><p>எழிலன் | கோப்புப் படம்</p></div>
“நான் குதிரை பேரம் செய்வதாகச் சொல்வது கதை...” - திருச்சியில் முதல்வர் விஜய் ஆவேசம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in