

கன்னியாகுமரியில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு.
நாகர்கோவில்: கன்னியாகுமரிக்கு இன்று வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவள்ளுவர் வெள்ளிவிழா நினைவு வளைவை திறந்து வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதியம் கன்னியாகுமரி வருகிறார். மாலையில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழா நினைவு வளைவைத் திறந்து வைக்கிறார்.
பின்னர் புத்தளம் கல்லடிவிளையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை, மு.க.ஸ்டாலின் படைப்பகம் ஆகியவற்றைத் திறந்துவைக்கிறார்.
அதைத்தொடர்ந்து, நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் வெண்கல சிலையை திறந்துவைக்கிறார்.
நாளை (பிப்.25) காலை நாகர்கோவில் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதைத்தொடர்ந்து, நாகர்கோவில் அநாதைமடம் மைதானத்தில் அமையவுள்ள ஐ.டி பார்க் உட்பட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்தும் பேசுகிறார்.
முதல்வர் வருகையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எஸ்.பி.ஸ்டாலின் தலைமையில் 2,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க இன்றும், நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா எச்சரித்துள்ளார். கன்னியாகுமரியில் இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ள திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவு.