

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு 44 காவல் துறை அதிகாரிகள்/பணியாளர்களுக்கு குடியரசு தின பதக்கங்கள் வழங்க முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “2026-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, காவல் துறையில் மெச்சத்தக்க நுண்ணறிவு மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பிரிவில் பணியாற்றிய 43 காவல்துறை அதிகாரிகள்/பணியாளர்கள் மற்றும் 1 தனிப் பிரிவு உதவியாளர், நுண்ணறிவுப் பிரிவு ஆகியோருக்கு “தமிழக முதலமைச்சரின் மெச்சத்தக்க நுண்ணறிவுப் பதக்கம் மற்றும் மெச்சத்தக்க சிறப்பு செயலாக்கப் பதக்கம்” வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா பத்து கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள், தமிழ்நாடு முதலமைச்சரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.