

சென்னை: தமிழகத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதிய உயர்வு, ஆசிரியர் பணி நியமனத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் உள்ளிட்ட 5 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 2 லட்சம் வீடுகள் உருவாகி வரும் நிலையில், மேலும் புதிதாக ரூ.3,500 கோடியில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும்.
கிராமப்புறப் பொருளாதாரத் தின் உயிர்நாடியாக விளங்கும் ஊரகச் சாலைகளை மேம்படுத்தும் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8,911 கோடியில் 20,484 கி.மீ. நீள கிராமப்புறச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக ரூ.1,088 கோடியில் சுமார் 2,200 கி.மீ. கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.
ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ் ஏற்கெனவே 33.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண் கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, திருமணமாகாத பெண்கள் ஆகியோர் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்' கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 1.80 லட்சம் பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கான விழா வரும் பிப். 4-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், முதல்முறையாக முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினார். அந்த சாதனையின் தொடர்ச்சியாக சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3400-ஆகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
குறு அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் வன களப் பணியாளர் களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3,200- ஆகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தி லிருந்து ரூ.3 ஆயிரமாகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200 வழங்கப்படும். அதேபோல, சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் வன களப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1,100 குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.1,000 குடும்ப ஓய்வூதிய மாக வழங்கப்படும்.
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்பு காலமுறை ஊதியப் பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர் களின் குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள்.
அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த கோரிக்கைகளில் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் ஏற்கெனவே அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
விரைவில் ஆணை வெளியீடு: அவர்களின் முக்கியக் கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.