துபாய் சாகச நிகழ்வில் உயிரிழந்த விமானி நமன்ஷ் சியாலுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: துபாய் ஏர் ஷோ நிகழ்ச்சியில் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விங் கமாண்டர் நமன்ஷ் சியாலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

துபாய் ஏர் ஷோ நிகழ்ச்சியில் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த ‘விங் கமாண்டர்' நமன்ஷ் சியாலின் உடல் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டதையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘விங் கமாண்டர் நமன்ஷ் சியாலுக்கு வீரவணக்கம்.

அவரது உடல் கோவைக்கு கொண்டுவரப்பட்ட காட்சிகளை கண்டு கலங்கினேன். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்குத் தமிழ்நாடு தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த இந்திய விமானப்படை விமானி 'விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் கோவை சூலூரில் உள்ள விமான சாகச படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவியும் விமானப்படை அதிகாரியாக சூலூர் வளாகத்தில் பணியாற்றி வருகிறார். ஆறு வயது மகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற குழுவினருடன் விமானி நமன்ஷ் சியாலும் சென்றார். துபாய் விமான சாகச நிகழ்ச்சியில் கடந்த 21ஆம் தேதியன்று இந்தியாவின் தேஜஸ் போர் விமானத்தை இயக்கிய நமன்ஷ் சியால், எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்தார்.

விங் கமாண்டர் நமன்ஷ் சியாலின் பூத உடல் கோவை சூலூரில் உள்ள விமானப்படை தளத்திற்கு இன்று கொண்டு வரப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட விமானப்படை அதிகாரிகள் அலுவலர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சூலூரில் விமானியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர், அவரின் உடல் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்திற்கு இந்திய விமானப்படை விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்
தேஜஸ் விமான விபத்து: சோகத்தில் மூழ்கிய விமானி நமன்ஷ் சியாலின் சொந்த கிராமம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in