

சென்னை: நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் கட்டுப்பாட்டில் 40 ஆயிரம் ஏரிகள், குளங்கள் உள்ளன.
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கண்ட நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்குவதன் மூலம், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க வழிவகை ஏற்படும் என்று இந்த கூட்டத்தில் தெரிவிக் கப்பட்டது.
மேலும், விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களின் மேற்பார்வையில் வண்டல் மண்ணை விலை இல்லாமலும் உரிமக் கட்டணம் செலுத்தாமலும் அவர்கள் எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவிலான வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல tnesevai.tn.gov.in இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் களால் அனுமதி வழங்கப்படும்.
இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர்கள் சிறந்த முறையில் நிறைவேற்ற 2026-27-ம் ஆண்டுக்கான ஏரிகள் மற்றும் குளங்களின் பட்டியலை மாவட்ட அளவிலான அரசிதழில் வெளியிடக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
நடைமுறையிலுள்ள விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி இத்திட்டத்தைக் கண்காணிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், அமைச்சர்கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட் டையன், தலைமைச்செயலர் மு. சாய்குமார், நீர்வளத்துறை செயலர் சத்யபிரத சாஹு, பொதுப்பணித் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, ஊரக வளர்ச்சித்துறை செயலர் பிரசாந்த் மு.வடநெரே உள்ளிட்டோர் பங் கேற்றனர்.