

சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் ஸ்டாலினை கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வரவேற்ற குழந்தைகள்.
சென்னை: சிறுபான்மையின மக்களுக்கு துணையாக திமுகவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் உறுதியாக இருக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக சென்னை கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 3,250 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மையின மாணவர்களுக்காக 14 கல்லூரி விடுதிகளில் நூலகம், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கருவிகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளோம்.
வெளிநாடுகளில் உயர்கல்வி பயில சிறப்பான திட்டம், 456 சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்து, ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செய்வதற்கான மானியம் உயர்வு, ரூ.2.87 கோடியில் 44 தேவாலயங்கள் புனரமைப்பு உட்பட பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி உள்ளது.
அதேபோல், 2019 முதல் 2024 வரை செயல்பட்டுவரும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள் 2019-ன்படி உள்ள மதச்சார்பான கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் முன்அனுமதியை வலியுறுத்தாமல் இனி திட்ட அனுமதி வழங்கப்படும்.
இந்த காலத்தில் திட்ட அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ள மதச்சார்பான கட்டிடங்களுக்கும் இது பொருந்தும் என்ற அறிவிப்பை தற்போது வெளியிடுகிறேன்.
இன்றைக்கு சிறுபான்மையின மக்கள் எத்தகைய அச்ச உணர்வோடு வாழ்கிறார்கள் என்று நான் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டின் குடிமக்களுக்கே அச்சத்தை வரவைக்கும் சர்வதிகார சக்திகளை எதிர்க்கும் திறனும், உணர்வும் திமுகவுக்குதான் உள்ளது.
உங்களுக்கு துணையாக திமுகவும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியும் உறுதியாக இருக்கும். அதேபோல், என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.