

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்
சென்னை: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று சென்னை வந்தார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை தனித் தனியாகச் சந்தித்து, தேர்தலை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது குறித்து இன்று கருத்து கேட்கிறார்.
தமிழகம், கேரளம், அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 2-வது வாரத்தில் அறிவிக்கவாய்ப்புள்ளது. இத்தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. ஏற்கெனவே 1,444 அதிகாரிகள், 714 பொது பார்வையாளர்கள், 233 காவல் பார்வையாளர்கள், 497 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே கடந்த பிப்.13, 14 தேதிகளில் தமிழகம் வந்த தேர்தல் ஆணையக் குழு அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள், ஐஜி-க்கள், வருமான வரி, அமலாக்கத் துறை, சுங்கத்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற எஸ்ஐஆர் பணிகளின் நிறைவாக கடந்த பிப்.23-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5.67 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். 74 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று சென்னை வந்தது. இக்குழு நேற்று புதுச்சேரி சென்று அங்கு நடைபெறும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து இன்று சென்னை வரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது தேர்தலை நேர்மையுடன், வெளிப்படைத் தன்மையுடன் நடத்துவதற்கான அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பெறுகிறார்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை பெற திட்டமிட்டிருப்பதாதக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (பிப்.27) மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி-க்கள், ஐஜி-க்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, வாக்குச்சாவடி மைய ஏற்பாடுகள், தேவையான பணியாளர்கள், அவர்களுக்கு வழங்க உள்ள தேர்தல் பயிற்சிகள், வாக்கு எண்ணிக்கை மைய ஏற்பாடுகள், தேர்தல் பாதுகாப்பு, தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த தேவையான காவல்துறையினர் உள்ளனரா, பதட்டமான, மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகள், பண விநியோகத்தை தடுக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை கண்காணிப்பற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளார்.