

இந்திய முப்படைகளின் வரலாற்று வெற்றிகளையும் தியாகங்களையும் போற்றும் வகையில் ராணுவ பாரம்பரிய வளாகமாக புதுப்பொலிவு பெற்றுள்ள சென்னை போர் நினைவுச் சின்னம்.
சென்னை: போர் பீரங்கி, கப்பல் மாதிரிகளுடன் சென்னை போர் நினைவுச் சின்னம், நாட்டின் வீரம் மற்றும் தியாகத்தை பறைசாற்றும் ராணுவ பாரம்பரிய வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரைக்கும், வரலாற்றுச் சிறப்பு பெற்ற புனித ஜார்ஜ் கோட்டைக்கும் இடையே அமைந்துள்ள போர் நினைவுச் சின்னம் முதல் மற்றும் 2-ம் உலகப் போர்களில் வீரமரணமடைந்த சென்னை மாகாண வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டது. காலப்போக்கில், சுதந்திரத்துக்கு பிந்தைய அனைத்து போர்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்று வீரமரணமடைந்த முப்படை வீரர்களை கவுரவிக்கும் தேசிய நினைவுச் சின்னமாக இது பரிணமித்துள்ளது.
இந்நினைவுச் சின்னம், தற்போது, இந்திய முப்படைகளின் வரலாற்று வெற்றிகளையும், தியாகங்களையும் போற்றும் நாட்டின் முன்னணி ராணுவ பாரம்பரிய மையமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்திய படைகளின் வீரம், தியாகம் மற்றும் சேவையை நினைவு கூரும் வகையில் பல்வேறு சிறப்புப் படைப்புகள் இங்கு நிறுவப்பட்டு வருகின்றன. இந்திய ராணுவத்தின் தக்ஷின் பாரத் பகுதி தலைமையகம், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் இந்த மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டுள்ளது.
வளாகத்தில் இடம்பெற்றுள்ள ‘டி-55’ ரக போர் பீரங்கி.
முதல்கட்டமாக, இந்திய ராணுவத்தில் நீண்டகால சேவைக்கு பின் ஓய்வு பெற்ற ‘டி-55’ ரக போர் பீரங்கி பிரத்யேக மேடையில் நிறுவப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க் கப்பலான ‘ஐ.என்.எஸ். விக்ராந்த்’, சென்னை காட்டுப்பள்ளியில் கட்டப்பட்ட ‘ஐ.என்.எஸ். அஞ்சதீப்’ ஆகியவற்றின் மாதிரிகளும் இங்கு பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்து, இந்திய வான்படையின் பெருமையை பறைசாற்றும் மிக முக்கிய போர் விமானமான ‘மிக்-21’ மற்றும் இந்திய கடலோர காவல்படையின் ரோந்து ஊர்திகளின் மாதிரிகளும் விரைவில் நிறுவப்பட உள்ளன.
இதற்கிடையே, பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே தேசபக்தியையும், ராணுவத்தை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில், சிறப்பு ‘ஒளி மற்றும் ஒலிக் காட்சி’ நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டுள்ளது.
போர் நினைவுச் சின்ன வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள ‘ஐ.என்.எஸ். அஞ்சதீப்’ போர்க்கப்பல் மாதிரிகள்.
தற்சமயம், ஆங்கிலம் மற்றும் இந்தியில் வழங்கப்படும் இந்நிகழ்ச்சிக்கு, விரைவில் தமிழ் மற்றும் ஆங்கில துணைத் தலைப்புகளும் சேர்க்கப்பட உள்ளன. இந்த நினைவுச் சின்னம் குறிப்பிட்ட நாட்களில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மெரினா கடற்கரையின் இரு இடங்களில் 1965 இந்திய - பாகிஸ்தான் போரில் ‘அசல் உத்தர்’ போர்க் களத்தில் பாகிஸ்தானின் பீரங்கிகளை அழித்து வெற்றி தேடித் தந்த பிரிட்டிஷ் தயாரிப்பான ‘சென்சுரியன்’ என்ற பீரங்கியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.