

சென்னை: செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கான காலக்கெடு டிச.14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும், தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் முதல் ஓராண்டுக் காலத்துக்கு மட்டும் உரிமம் செல்லத்தக்கது என்பதை உறுதிப்படுத்தி மீண்டும் உரிமம் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப் பிராணிகளுக்கு மைக்ரோசிப் பொருத்தி உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.
அதன்படி இந்த மைக்ரோசிப் எண்ணுடன் செல்லப் பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படும். அந்த வகையில் சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இதுவரை 91,711 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்
யப்பட்டு 45,916 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கு நவ.23-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே செல்லப் பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் உரிமம் பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு தற்போது டிச.7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும் செல்லப் பிராணிகள் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று உரிமம் பெறுவதற்கான காலக்கெடு டிச.14-ம் தேதி வரை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
செல்லப் பிராணிகளின் உரிமையாளர்கள் இதைப் பயன்படுத்தி டிச.14-ம் தேதிக்குள் தங்களது செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை திரு.வி.க.நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் மாநகராட்சியின் செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களில் பெற்றுக்கொண்டு, அபராதம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.