

சென்னை: திருநெல்வேலி யார்டில் மறுசீரமைப்பு பணி காரணமாக, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையில் வரும் 30-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, சென்னை எழும்பூர் - நாகர்கோவிலுக்கு வரும் 30-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (20627), 45 நிமிடங்கள் தாமதமாக அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
நாகர்கோவில் - சென்னை எழும்பூருக்கு அன்று பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் ரயில் (20628), ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
திருச்சி - திருவனந்தபுரம் சென்ட்ரலுக்கு வரும் 30-ம் தேதி காலை 7.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (22627) விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, கொல்லம் வழியாக திருப்பி விடப்படும். இந்த ரயில் சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், குழித்துறை வழியாக இயக்கப்படாது.
கூடுதல் நிறுத்தமாக, தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இத்தகவல், தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.