

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு பிஹார் முதல் தென் தமிழகம் வரை ஜார்க்கண்ட், வடக்கு சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், விதர்பா, மரத்வாடா மற்றும் உள் கர்நாடகா வழியாக சுமார் 900 மீட்டர் உயரத்தில், ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, நாளை (14-ம் தேதி) முதல் வரும் 19-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோர பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக் கூடும். இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
தமிழகத்தில் நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக் கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவை ஒட்டியே இருக்கக் கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 81 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.