

இடம்: சென்னை
படம்: ஆர்.ரவீந்திரன்
சென்னை: தமிழகத்தில் மார்ச் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னார் வளைகுடா முதல் தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நாளை (மார்ச் 20) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் 22 முதல் 24-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பள்ளிக்கரணை, ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளத்தில் தலா 10 செ.மீ, சென்னை மேடவாக்கம், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் தலா 9 செ.மீ, சேலம் மாவட்டம் சங்கரி துர்க்கம், சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம், சேலம் எடப்பாடி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தலா 8 செ.மீ, கடலூர் மாவட்டம் புவனகிரி, சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.