

மதுரையில் ஆர்ப்பாட்டம்
சென்னை: ‘எய்ம்ஸ்-ம் வராது, மெட்ரோ ரயிலும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கிறது மத்திய பாஜக அரசு’ என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ எய்ம்ஸ்-ம் வராது, மெட்ரோ ரயிலும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர்...
அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை முடக்கியுள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோவை மற்றும் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று போராட்டம் நடந்தது.
மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பா? - கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டம் மக்கள் தொகையை சுட்டிக்காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு நகரங்களிலும் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதாக மத்திய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல். கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவையில் 15.84 லட்சம் மக்களும், மதுரையில் 15 லட்சம் மக்களும் வசிப்பதாக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.